இதுதான் திராவிட மாடல் ஆட்சி : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

By 
nellai4

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லையில் நடைபெற்ற விழாவில் திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்க கடன், இலவச வீட்டுமனை பட்டா, 78 பழங்குடி காணி இன மக்களுக்கு நில உரிமை பட்டா ஆகியவற்றை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த ஒரு வருடத்தில் தி.மு.க. ஆட்சியின் கீழ் நெல்லை மாவட்டம் அடைந்த பலன்கள் ஏராளம். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 1,113 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது.

கூட்டுறவு துறை சார்பில் 9,319 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். 28,183 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்பெற்றுள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் 58,913 மாணவ-மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் இலவச மகளிர் பயண திட்டத்தின் கீழ் இதுவரை 6 கோடியே 92 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர். தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் 3,421 பேர் பயன்பெற்றுள்ளனர்.

கடந்த 2009-ம் ஆண்டு நான் துணை முதல்- அமைச்சராக இருந்த பொழுது, கலைஞர் முதல்- அமைச்சராக இருந்தபோது ரூ.369 கோடி மதிப்பீட்டில் சிறப்புமிக்க தாமிரபரணி-கருமேனி ஆறு நதிநீர் இணைப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 10 ஆண்டுகளாக அந்த திட்டத்தின் கீழ் எந்த பணியும் நடைபெறவில்லை. தற்போது அந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.

அதன்படி அடுத்த ஆண்டு 2023ம் ஆண்டு இந்த திட்டம் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வறட்சி பகுதிகள் 20 ஆயிரத்து 343 ஏக்கர் நிலங்கள் மற்றும் 50 கிராமங்கள் பயன்பெறுவார்கள். தமிழகத்தில் தொழில்வளர்ச்சிக்காக புத்தாக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட புத்தாக்க மையத்தின் கீழ் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிய தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அகத்தியர்மலை, யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்டான் சிப்காட்டில் சூரிய மின் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மணிமுத்தாறு பகுதியில் ரூ.7 கோடியில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். களக்காடு பகுதியில் வாழை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.1 கோடியில் வாழை ஏல மையம் அமைக்கப்படும்.

நெல்லை மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களை தேசிய அளவிலான போட்டிகளுக்கு தயார்படுத்தும் வகையில் ராதாபுரத்தில் விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும். நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை வேகப்படுத்தி ரூ.370 கோடியில் மூன்று கட்டங்களாக புறவழிச்சாலை அமைக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,200 குளங்களை பாதுகாக்க நெல்லை நீர்வள அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் தன்னாலர்களும் இணைந்து ஏராளமான குளங்களை தூர்வாரி உள்ளனர். மேலும் பல குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மழை வெள்ள காலத்தில் மாநகரில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக திருப்பணிகரிசல்குளத்தை தூர்வாரி இருப்பதால் எதிர்வரும் காலத்தில் வெள்ளப்பாதிப்புகள் ஏற்படாது. தமிழ்நாட்டில் பின்தங்கிய மாவட்டங்கள் என்பதே இருக்க கூடாது என்பதுதான் எனது எண்ணம். அதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம்.

மேலும் 234 தொகுதிகளிலும் தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்கு தீர்வு காண ரூ.234 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இந்தியாவிற்கே முன்மாதிரியான திட்டங்களாக திகழ்கின்றன. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
 

Share this story