நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்கிறேன் : கமல்ஹாசன் அறிவிப்பு
 

By 
erodu2

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரிப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பெரியாரின் பேரனும், எனது நண்பருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக, செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மக்கள் நீதி மய்யம் கட்சி செய்யும். ஈரோடு கிழக்கு தொகுதியில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி அருணாசலம் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். இன்றைய அரசியல் சூழ்நிலையில் மதவாத சக்திகள் முழுபலத்தோடு எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மக்கள் நீதி மய்யத்திற்கு எள்முனையளவும் கருத்து வேறுபாடு இல்லை.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனைகள் அற்ற ஆதரவு அளிப்பது என முடிவு செய்துள்ளோம். இந்தியாவின் பன்முகத்துவத்துவமும் இறையாண்மையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகிறது. மொத்த தேசத்தையும் ஒற்றை பண்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென துடிக்கிறார்கள்.

மக்களின் உணவு, உடை, மொழி, கலாச்சாரம் என ஒவ்வொன்றிலும் ஊடுருவ முயற்சிக்கிறார்கள். ஜனநாயக சக்திகளின் குரல்வளைகள், கருத்துரிமைகள் ஒடுக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சுதந்திரமாக செயல்படவிடாமல் கொல்லைப்புறம் வழியாக நுழைந்து மாநில உரிமைகளில் தலையிடுவதும், இடையூறு செய்வதும் தொடர்கிறது.

இந்த ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டிய வரலாற்று கடமை ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றி பெற செய்து, மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்று இப்போது எதுவும் கூற முடியாது. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Share this story