அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வேண்டும் : காவல் நிலையத்தில் மனு..

By 
aiadmk3

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அ.தி.மு.க. சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் 26-3-2023 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 18 , 19-ம் தேதிகளில் மாலை 3 மணி வரை நடக்கிறது.

20-ம் தேதி காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. 21-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். வாக்கு எண்ணிக்கை 27-ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட விரும்பும் கட்சி தொண்டர்கள், மேற்கண்ட கால அட்டவணைப்படி, தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று, கட்சி சட்ட விதி 20 (அ) பிரிவு - 1 (ஏ), (பி), (சி) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு, கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறுவதையொட்டி கட்சி தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கட்சிக்கு எதிரானவர்கள், சமூக விரோதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story