தப்ப ஒத்துக்கங்க, தப்பிக்க நினைக்காதீங்க..! ஆளுங்கட்சியை அலறவிடும் அண்ணாமலை

By 
dmkbjp

சென்னை விமான நிலையத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளிக்கையில்;-

மாநில அரசு கேட்டுள்ள இழப்பீடு நிதி 5,000 கோடி என்பது வேறு. அதற்கான இழப்பீடு கணக்கெடுக்கும் பணி நடந்த பின் மத்திய அரசு வழங்கும். தற்போது பிரதமர் மோடி 24 மணி நேரத்துக்குள்ளாக, 450 கோடி ரூபாய் மாநில பேரிடர் மேலாண்மை நிதியாகவும், மீண்டும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க, இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னைக்கு, நீர் நிலை கரைப்பகுதிகளை மேம்படுத்த 561 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

திமுக திராவிட மாடல் என்றெல்லாம் அரசியல் லாபத்திற்காகப் பேசிக்கொண்டிராமல், இந்த நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும். திமுக, தாங்கள் தவறு செய்துவிட்டதை ஏற்றுக் கொண்டாலே, மக்களின் கோபம் குறைந்துவிடும். அதை விட்டுவிட்டு, இயற்கை மேல் பழியைப் போட்டுத் தப்பிக்க முயற்சிப்பது, மக்களின் கோபத்தை இன்னும் அதிகமாக்குமே தவிர குறையாது. திராவிட மாடல் என்று பொய் பிம்பத்தை நிறுவ முயற்சித்ததன் விளைவு, பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானது மட்டும்தான் என விமர்சித்துள்ளார். 

திமுக அரசு கொடுத்த பொய்யான உறுதிமொழிகள், மற்றும் 98% வடிகால் பணிகள் முடிவடைந்து விட்டன என அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கூறியதால், பொதுமக்கள் எதிர்பாராத அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. நான்கு ஐந்து நாட்கள் வெள்ளம் தேங்கியிருப்பது, சென்னை மாதிரியான பெரு நகரங்களில் ஏற்றுக்கொள்ள முடியாது. சென்னையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு முறையும் பாதிப்பு அதிகமாகிறது. 98% வடிகால் பணிகள் நிறைவடைந்திருந்தால் இந்த அளவுக்கு தண்ணீர் தேங்கியிருக்காது என அண்ணாமலை கூறினார். 

அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் தங்களால் முடிந்த அளவுக்குப் பணிகளை மேற்கொண்டார்களே தவிர, ஆளுங்கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளோ களத்தில் முழுமையாக நின்று பணிகளில் ஈடுபடவில்லை. அவர்கள் களத்தில் நின்றிருந்தாலே பொதுமக்களுக்கு நம்பிக்கை கிடைத்திருக்கும். அது இல்லாததால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர் என்றார். 

மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரே மாநகரம் சென்னை. மீண்டும் ஒருமுறை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்டால், மக்கள் யாரையும் மன்னிக்க மாட்டார்கள். இது போல பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, பொதுமக்களையும் உள்ளடக்கிய குழு அமைத்து திட்டங்களைச் செயல்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும். அவர் இதனைச் செய்வார் என்று நம்புகிறேன். 

இதுவரை, சென்னைக்கு மட்டும் 2015 ஆம் ஆண்டிலிருந்து அம்ருத் திட்டத்தின் கீழ், பல தவணைகளாக ரூபாய் 4,397 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் ஆட்சியில் இருந்த இரண்டு கட்சிகளும் இதுவரை கூறியுள்ள கணக்குப்படி, 9,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர்.

மொத்தமாக இந்த 13,000 கோடி நிதியில் செய்த பணிகள் என்ன என்பதை மக்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர். உடனடியாக போர்க்கால அடிப்படையில், நாட்டின் தலைசிறந்த வல்லுநர்களைக் கொண்டு, திட்டங்களை முறையாகச் செயல்படுத்தினால் மட்டுமே, மீண்டும் ஒரு முறை இது போன்ற பாதிப்புக்குள்ளாகாமல் சென்னையையும் பொதுமக்களையும் காப்பாற்ற முடியும் என அண்ணாமலை கூறியுள்ளார். 

Share this story