அதிமுக நாட்டு மக்களுக்கான கட்சி; திமுக வீட்டு மக்களுக்கான கட்சி - பிரச்சாரத்தில் சீறிய எடப்பாடி பழனிசாமி..

By 
admkkk

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர்,

பேரறிஞர் அண்ணா சொன்னார் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்  என தெரிவித்தார். அதற்கேற்றாற் போல் அதை நிறைவேற்ற அதிமுக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என கூறினார்.  அதிமுக மூன்றாக பிரிந்து விட்டது என்று ஸ்டாலின் தொடர்ந்து  கூறுகிறார் அது ஒரு போதும் நடக்காது,  அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரம் வந்து பார்த்தால் தெரியும். மக்களின் கூட்டத்தை பார்த்தாலே அவருக்கு கதெரிந்து விடும். அண்ணா கண்ட கனவை அதிமுக நிறைவேற்றியே தீரும் என கூறினார்.

அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி ஆகிய தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்து தலைவர்கள் ஆனால் குடும்பத்திற்காக வாழும் தலைவர்கள் யாரு என  உங்களுக்கு தெரியும். மக்களுக்காக வாழ்கின்ற தலைவர்கள் இருக்கிறார்கள், ஆனால் கருணாநிதி தனது குடும்பம், தனது வீட்டு மக்களுக்காக வாழ்ந்தவர் என விமர்சித்தார்.

நெசவாளர்களுக்கு எதுவும் செய்யாத அரசு மத்திய அரசு,  பாஜக தேர்தல் அறிக்கையில் நெசவாளர்களுக்கு எந்த வித நன்மையும் அறிவிக்கவில்லை, பாஜக தேர்தல் அறிக்கையில் ஒன்றும் இல்லையெனவும் விமர்சித்தார். திமுக ஆட்சி வந்தாலே மின் கட்டணம் உயர்ந்துவிடும், கோடை காலங்களில் மின் வெட்டு அதிகரிக்கும். திமுக ஆட்சி வந்த நாளில் இருந்து விலைவாசி உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது. தமிழகத்தில்  எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை அதிகளவில் நடைபெறுகிறது என விமர்சித்தார். போதை பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தவர்,  இதனை இந்த திமுக ஆட்சி கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

கண்ணுக்கு தெரியாத காற்றில் 2ஜி அலைக்கற்றையில் 1லட்சம் கோடி ஊழல் செய்த கட்சி திமுக  என தெரிவித்தார். 2ஜி ஊழல் மீண்டும் தூசி துடைக்கப்பட்டு நீதிமன்றத்தில் வந்துள்ளது அதனால் தான் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க துடிக்கிறார். மத்தியில் ஆட்சியில் வந்தால் தான் ஊழலில் இருந்த தப்பிக்க திமுகவினர் ஆட்சிக்கு வர அயராது பாடுகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Share this story