அதிமுகவின் நிலைமை கூடிய விரைவில் தெரியவரும்: டிடிவி. தினகரன் பேட்டி 

By 
ttveps

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மற்றும் வராகி அம்மன் ஆகிய கோவில்களில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்:

ஜூன் 4ம் தேதி தமிழகத்தில் உள்ள மக்கள் விரோத திமுக அரசை 2026 சட்டமன்றத் தேர்தலில் முடிவு கட்டும் விதமாக வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இருக்கும். தமிழகத்தில் மக்கள் அதற்கு ஆதரவாக தீர்ப்பளிப்பார்கள் என்றார். 

சவுக்கு சங்கர் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மற்றும் காவல் துறையினர் பற்றி பொதுவெளியில் கீழ்த்தரமாக பேசி உள்ளதை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியாது. பத்திரிக்கை சுதந்திரம் என்று யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது என்பதற்கு இது முன் உதாரணம். இந்த விஷயத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை நல்ல நடவடிக்கை என்றும் டிடிவி. தினகரன் தெரிவித்தார். 

மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் இந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக பயந்து கொண்டு தான் கஞ்சா விற்ற பணத்திலும் ஊழல் செய்த பணத்திலும் வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்ற ரீதியில் நடந்து கொண்டது. குறிப்பாக தேனியில் திமுகவிற்கு தக்க பதிலடியை மக்கள் கொடுப்பார்கள். தேனியில் தான் வெற்றி பெறுவது உறுதி என்றும் திமுகவிற்கு தக்க சவுக்கடி கொடுப்பார்கள் என்றார்.  

தற்போது போக்குவரத்து துறையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் என்பதற்கு அடிப்படை காரணமே முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாது தான். குறிப்பாக தேர்தலில் வெற்றி பெற்றால் காவலர்களுக்கு பேருந்து இலவச பயணம் என்று அறிவித்துவிட்டு இதுவரை அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. தேர்தல் முடிவுகளை பொறுத்து அதிமுகவின் நிலை கூடிய விரைவில் தெரியவரும். மூன்றாவது முறையாக உறுதியாக பாஜக வெற்றி பெற்று மோடி தான் பிரதம மந்திரியாக ஆட்சியில் அமருவார் என்றும் டிடிவி. தினகரன் கூறினார்.

 

Share this story