ஈரோடு இடைத்தேர்தல் குறித்து, அண்ணாமலை கருத்து..

By 
annamalai26

திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் எப்படி வரும் என்று நேற்றைய தினம் வெளியான பொருளாதார சர்வே ஆவணம் ஒரு அளவீடாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். பட்ஜெட்டை பொறுத்தவரை அமிர்த கால பட்ஜெட் என நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும். இந்தியாவின் உட்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி வரை நிதி ஒதுக்கி உள்ளார்கள். இதில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்குவார்கள் என்பது எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல, எங்கள் நம்பிக்கை.

ஐ.எம்.எப். கணிப்பின்படி இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி இந்த ஆண்டுக்கான அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்லும்.

எடப்பாடி பழனிசாமி ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இன்று அறிவித்துள்ளார். அவர் பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் கலந்தாலோசித்து விட்டுத்தான் அறிவித்தாரா என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை,

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து யாரிடம் என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமாக இருக்காது. எல்லா தலைவர்களிடமும் பேசியிருக்கிறோம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு, யாருக்கு என்ன பலம் என்பதை காண்பிப்பது மட்டும் முக்கியமல்ல.

2 மாதத்தில் இந்த இடைத்தேர்தலை மக்கள் மறந்துவிடுவார்கள். ஆனால் நாம் 2024 பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார். 

Share this story