எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை.. பதிலடி கொடுத்த துரைமுருகன்..

By 
durai8

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டை அமலாக்கத்துறை தட்டும் என அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், கதவை தட்ட வேண்டிய அவசியம் அமலாக்கத்துறைக்கு தேவையில்லை, கதவை திறந்தே வைத்திருக்கிறேன் என அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

திமுக - பாஜக இடையை தொடர்ந்து வார்த்தை போர் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திமுகவினர் வீடுகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனை நடத்தும் என அண்ணாமலை கூறியிருந்தார். அவர் கூறியபடியோ அமைச்சர் செந்தில்பாலாஜி, பொன்முடி, எ.வ.வேலு வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்றது.

இதனையடுத்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தது. இந்த பரபரப்புக்கு மத்தியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண்.. என் மக்கள் என்ற நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இதில் வேலூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் நடைபெற்ற நடைபயணத்தின் போது அமைச்சர் துரைமுருகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தை விமர்சித்திருந்தார். அப்போது பேசிய அண்ணாமலை திமுக ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், மணல் கொள்ளை மூலமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 4,730 கோடி ரூபாய். இந்த மாவட்ட அமைச்சரான, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தான் இதற்கு முழுமுதற் காரணம்.

இந்த மணல் கொள்ளை முன்னின்று செய்தவர்களுடைய 136 கோடி ரூபாய் சொத்தை, அமலாக்கத்துறை நேற்று முடக்கியுள்ளது. அமலாக்கத்துறை, கதிர் ஆனந்த் மற்றும் அமைச்சர் துரைமுருகன் வீட்டுக் கதவைத் தட்டும் நாள் விரைவில் வரலாம். திமுகவினர் செய்துள்ள ஊழலுக்கு, புழல் சிறையில் தனி கட்டிடம் கட்டி, திமுக அமைச்சர்கள் தங்கியிருக்கும் இடம் என்று பெரிய பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என பேசியிருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் துரைமுருகன் இன்று பதிலளித்துள்ளார். அமலாக்கத்துறை நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டை தட்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளாரே என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், அமலாக்கத்தறை கதவை தட்ட வேண்டிய அவசியம் இல்லை, கதவை திறந்தே வைத்திருக்கிறேன் என தெரிவித்தார்.

அடுத்ததாக பொருளாதாரத்தில் தமிழகம் பின் தங்கியுள்ளதாக கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன், அண்ணாமலை என்ன பொருளாதார வல்லுநரா.? என கேள்வி எழுப்பினார். எதிர்கட்சி என்று இருந்தால் பேசத்தான் செய்வார்கள் என கிண்டலாக கூறிவிட்டு சென்றார்.

Share this story