அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக, அண்ணாமலை தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்: ஆர் பி உதயகுமார் அறிவுரை..
![rpu8](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/efa8da76c0724554f63c680d8ec65e4f.jpg)
மதுரை அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு பகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அலங்காநல்லூர் ஒன்றிய கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதில் உள்நோக்கம் உள்ளது. அரசியல் சூழ்ச்சி உள்ளது. அவரின் புகழ்ச்சிக்கு நாங்கள் ஒருபோதும் மயங்கமாட்டோம். வேண்டுமென்றால் அண்ணாமலை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினால் நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.
அவர் தற்போது பாஜகவின் மறைந்த மூத்த தலைவர் வாஜ்பாயை புகழ்ந்து பேச வேண்டும். தற்போதைய பாஜகவின் மூத்த தலைவர் அமித்ஷாவை புகழ்ந்து பேச வேண்டும். அதை விடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு தொண்டனும் தெய்வமாக வணங்கக்கூடிய எங்களின் உயிர் மூச்சாக இருக்கக்கூடிய எங்கள் அம்மாவை அவர் புகழ்ந்து பேசுவது ஏதோ சூழ்ச்சியாக தான் பார்க்கப்படுகிறது. இதில் உள்நோக்கமும், அரசியல் சூட்சமமும் இருப்பதாகவே நினைக்கிறோம்.