'தைரியம், திராணி இருந்தால்..' என எடப்பாடிக்கு அண்ணாமலை மிரட்டல்?

By 
epsa3

கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களை சந்தித்து முக்கிய திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து என ஒரு வீடியோ வெளியிட்டார். 

தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:- ஊழல், லஞ்சம் குறித்து இப்போது கேள்வி கேட்காவிட்டால், தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய கேடு காத்துக்கொண்டு இருக்கிறது. பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது, கர்நாடக தேர்தல் பணி உள்ளதால் என்னை வர வேண்டாம் என பிரதமர் அறிவுறுத்தினார். 

கர்நாடக தேர்தல் பணியை கவனிக்க கூறினார். இதனால், நான் சென்னைக்கு வரவில்லை. டெல்லியில், நினைக்கும் போது பிரதமர் மோடியை சந்திப்பவன் நான். ஊழலை எதிர்க்க வேண்டும் எனில் மொத்தமாக தான் எதிர்ப்போம். தலைவனாக இருக்கும் வரை இப்படி தான் செயல்படுவேன். 

அதை செய்யக்கூடாது எனில் தைரியம், திராணி இருந்தால் டெல்லி சென்று, அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள். ஏனெனில் இது பிரதமர் மோடி விரும்பக்கூடிய அரசியல். எந்த தயவிலும் நான் எம்.பி.,ஆக வேண்டிய அவசியம் இல்லை. 10 தேர்தலில் தோற்றாலும் இங்கு தான் இருப்பேன்.

சி.பி.ஐ.,யிடம் செல்கிறோம் அடுத்த பாகம் நீங்கள் நினைத்து பார்க்காத வகையில் இருக்கும். பினாமி சொத்து போன்றவற்றை அதில் பார்க்கலாம். ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட், ஜல்லிக்கட்டு என அனைத்திலும் கையெழுத்து போட்டது திமுக. என்னிடம் நிறைய பட்டியல் இருக்கிறது. 

முதல் பட்டியல் முதல்வர் பற்றி நேரடியாக இருக்க வேண்டும் என வெளியிட்டுள்ளேன். அடுத்தடுத்து அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பட்டியல் வெளியிடுவேன். இன்னும் 3 பட்டியலை வெளியிட உள்ளேன் என கூறினார்.

Share this story