வெகுஜன விரோதியான எடப்பாடிக்கு எதிர்காலம் இனி இருக்காது : ஓபிஎஸ் தரப்பு உறுதி 

By 
marudhu112

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

'பயணம் செய்யும் படகில் ஓட்டை விழுந்திருப்பதை தெரிந்துகொண்டு, அதை சொன்னால் படகு ஓட்டுபவனுக்கு கோபம் வரும் என்று அமைதி காத்தால் அப்படி அமைதி காப்பவர்களும் சேர்ந்தே கடலில் மூழ்க வேண்டியிருக்கும் என்பதே உண்மை.

எனவே, மக்களை வசீகரிக்கும் எந்த ஒரு அம்சமும் இல்லாத எடப்பாடி மரக்கட்டையிடம் ஒற்றுமையின் சக்தியை எடுத்துச் சொல்லவேண்டிய தலையாய கடமை கட்சியை வைத்து முகவரி பெற்ற மூத்தவர்களுக்கு உண்டு.

நம்மோடு முடிந்தது அண்ணா திமுக சகாப்தம் என்கிற முடிவுரைக்கு  நீங்களும் காரணமாக இருந்துவிடாதீர்கள். அடுத்த தலைமுறைக்கு இயக்கத்தை பொலிவுடன் ஒப்படைத்தோம் என்கிற பெருமையையும் ஆத்ம திருப்தியை பெற்றிட அருள்கூர்ந்து முன்வாருங்கள்.

குற்றத்தை செய்பவனினும் கொடியவன், அதனை தடுக்காமல் கடந்து போகிறவன் தான். இதனை நீங்கள் உணராது போனால் காலம் உங்களை மன்னிக்காது.

எந்த காலத்திலும் கட்சியின் அடிப்படை சட்ட விதிகளை மாற்றக்கூடாது என்று சொன்ன மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் கட்டளையை துச்சமென தூக்கி வீசிய  எடப்பாடி...  எம்.ஜி.ஆருக்கு எதிரி...

புரட்சித் தலைவி அம்மாவை நிரந்தர பொதுச்செயலாளர் பதவியிலிருந்தே நீக்கிய எடப்பாடி.. புரட்சித்  தலைவி அம்மாவுக்கும் எதிரி..

அம்மா அடையாளம் காட்டிய ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவோடு நாலரை வருடங்கள் ஆட்சி நடத்தி முடித்துவிட்டு, நன்றியுணர்ச்சி கடுகளவும் இல்லாது ஓ.பி.எஸ்-க்கும் எதிராக நடக்கும் எடப்பாடி ஓ.பி.எஸ்ஸக்கும் எதிரி...

அ.தி.மு.க.வின் தலைமையை தொண்டர்கள் மட்டுமே தேர்வு செய்யவேண்டும் என்பதை மாற்றி இருக்கும் 
எடப்பாடி தொண்டர்களுக்கும் எதிரியே.

ஆக, மக்கள் பணத்தை சம்பந்தி சகிதமாக சக மந்திரிகள் சூழ கொள்ளை அடித்த எடப்பாடி மக்களுக்கும் எதிரியே..

ஆக, எடப்பாடி பழனிச்சாமி எனும் கொடநாடு குற்றவாளியை சுற்றி இருப்பவர்கள் அவரோடு சேர்ந்து நாலரை வருடங்கள் மக்களின் வரிப்பணத்தை தூருவாரிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல்லாண்டு காலமாக பதவிகளை வைத்து பண்ணையார்களாகிவிட்ட மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே...

அதனால், வெகுஜன விரோதியான எடப்பாடிக்கு எதிர்காலம் என்பதே இனி ஒரு போதும் இனி இருக்காது..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 

Share this story