ஐகோர்ட் நீதிபதி நியமனம்; எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது : வைகோ

By 
vaiko4

சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து தெரிவித்தவர். நீதிபதி ஆவதற்கு தகுதியற்றவர். அவரை அறிவித்தது எங்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

எனவே அவரை நீதிபதியாக அறிவித்தவுடன் நாங்களும், காங்கிரஸ் கட்சியினரும் ஜனாதிபதிக்கும், தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பினோம்.

கலைஞருக்கு நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைப்பதில் எந்த தவறும் இல்லை. கலைஞர் எழுதிய சங்க தமிழின் அடையாளம் தான் பேனா. அவர் தீட்டிய குறளோவியம் தான் அந்த பேனா. அவர் எழுதிய தொல்காப்பிய பூங்கா தான் அந்த பேனா. எனவே பேனாவை சின்னமாக வைப்பது தவறில்லை.

பட்டேலுக்கு சிலை வைக்கும் போது எதிர்ப்பு காட்டாதவர்கள், இப்போது எதிர்ப்பு காட்டுவது ஆத்திரத்திலும் எரிச்சலிலும் காட்டுவதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story