தடைக்கல்லாக பாஜக இருக்காமல், படிக்கல்லாக இருக்க வேண்டும் : தமிழக அறநிலையத்துறை
அனுமன் ஜெயந்தி விழா, தமிழகம் முழுவதும் இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில், நடை திறக்கப்பட்டு 1,00,008 வடைமாலை சாத்தப்பட்டுள்ளது.
கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனைக் காண, இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
'ரூ.1,640 கோடி' நிலங்கள் மீட்பு :
இந்நிலையில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, 'திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல. திமுக ஆட்சிக்கட்டிலில் ஏறிய பிறகுதான், கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 437 பேரிடம் இருந்து ரூ 1,640 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பயப்பட மாட்டார் :
நல்லவைகளுக்கு நிச்சயம் நமது முதல்வர் கைகொடுப்பார்கள். அல்லவை என்றால், அதை எதிர்ப்பதற்கு துணிவார், பயப்பட மாட்டார்.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு, மேலும் பல திட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
நலத்திட்ட பணிகளுக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தடைக்கல்லாக இருக்காமல் படிக்கல்லாக இருக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.
*