கேரளாவில் கால் பதிக்கும் பாஜக.! - திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றிக்கொடி..

By 
gopi

2024 மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கேரளாவில் பாஜக முதல் முறையாக கால் பதித்து சாதனை படைத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தகவல்படி, பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி 3,96,881 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனில் குமார் 3,23,761 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் 3,15,546 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

சுரேஷ் கோபி வெற்றி பெற்றது குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், அவரது வெற்றி உறுதியாகிவிட்டதால், அந்த மாநில பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதேபோல, கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்திலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு  இருப்பதாகக் கருதப்படுகிறது. பாஜக சார்பில் போட்டியிடும் ராஜீவ் சந்திரசேகருக்கும் காங்கிரஸ் வேட்பாளரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான சசி தரூருக்கும் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் ராஜீவ் சந்திரசேகர் 2,87,094 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் 2,86,665 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். சசிதரூர் - ராஜீவ் சந்திரசேகர் இடையே சில நூறு வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றனர். இதனால், திருவனந்தபுரத்தில் பரபரப்பாக வாக்குப்பதிவு நடக்கிறது.

கேரளாவில் உள்ள இன்னொரு நட்சத்திரத் தொகுதியான வயநாட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி 2.5 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆனி ராஜாவும் பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரனும் போட்டியில் உள்ளனர்.

Share this story