பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும் - அண்ணாமலை திட்டவட்டம்..

By 
panjami

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் எஸ்சி, எஸ்டி ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகார் தொடர்பான விசாரணையை தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் தொடரலாம். புதிதாக நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும் என கூறி, ஆர்.எஸ்.பாரதியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம், பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. பல தளங்களில் கேள்வி எழுப்பியும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டிய திமுகவோ, இதற்குப் பதில் கூறுவதைத் தவிர்த்து வருவது பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

இது குறித்து தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்கக் கோரி, கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் சீனிவாசன் முதல் புகார்தாரராகவும், பாஜக மாநில பட்டியல் அணித் தலைவர் தடா பெரியசாமி இரண்டாம் புகார்தாரராகவும் தொடர்ந்த வழக்கில், பட்டியலின ஆணையம் விசாரிக்கத் தடை கோரி திமுக தொடர்ந்த மனு, இன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, புதியதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையைத் தொடங்க வேண்டும் என்ற தீர்ப்பு வந்துள்ளது. 

திமுக இனியும் விசாரணையைத் தள்ளிப் போட முயற்சிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும்.” என பதிவிட்டுள்ளார்.

Share this story