இருவருமே எங்கள் பகையாளிகள்தான்: ஜெயக்குமார் காட்டம்..

By 
lili3

கோவையில் அதிமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ் தேர்தல் முடிந்தவுடன் பாஜகவில் சேர்ந்து விடுவார். பா.ஜ.கவிற்கு கூலிக்கு மாரடிப்பவராக ஒ.பி.எஸ் உள்ளார். அதிமுக தலைமையில் மகத்தான கூட்டணி அமையும். பாஜக இல்லாத கூட்டணியாக அமையும் என்றார். 

மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் எடப்பாடி ஆட்சி இருந்ததாகவும், பா.ஜ.க ஆதரவால் ஆட்சி தொடர்ந்ததாக ஓபிஎஸ் சொல்வது மரை கழன்ட விடயம். தேமுதிக 14 தொகுதிகள் கேட்பது அவர்களுடைய விருப்பம். மற்ற கட்சி தான் அதை ஏற்றுக் கொள்வதா, இல்லையா என்பதை முடிவு செய்யும். 

எதுவாக இருந்தாலும் பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார். இதில் நான் எதுவும் சொல்ல முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா பல நேரங்களில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்கள் வழியில் கழகம் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறும். கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு தான் வெற்றி பெற வேண்டும் என இல்லை. அதே வேளையில் கூட்டணிக்கு பல கட்சிகள் வரலாம். தனித்தன்மையோடு பல கட்டங்களில் நாங்கள் வென்று இருக்கின்றோம். கட்சிகள் இணைந்தால் அது அவர்களுக்கு அங்கீகாரமாக இருக்கும். 

பிற கட்சிகள் கூட்டணிக்கு வரட்டும் என காத்திருக்க வேண்டிய சூழல் எங்களுக்கு இல்லை. பாஜக இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுவிட்டது. தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் அறிவிக்க இன்னும் நேரம் இருப்பதால் அதற்குள் மகத்தான கூட்டணி அதிமுக தலைமையில் அமையும். நாங்கள் யாரையும் கெஞ்ச வேண்டிய அவசியம் கிடையாது. யார் வீட்டு கதவையும் தட்டவேண்டியதும் கிடையாது. கட்சிகள் எங்களை நோக்கி வரும் என்றார். 

அதிமுகவின் இலக்கை பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கிளாம்பாக்கத்தில் உரிய பேருந்துகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த அரசு துக்ளக் அரசாங்கமாக இருக்கிறது. உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நிர்வாக திறனற்ற அரசாக இந்த அரசு உள்ளது. 

முள்ளிவாய்க்கால் படுகொலையின் பொழுது ஆதரவை வாபஸ் வாங்கிடுவோம் எனக்கூறி ஏன் போரை நிறுத்தவில்லை? கச்சத்தீவை தாரை வார்க்கும் பொழுது திமுக பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது இலங்கை அரசு அழுத்தங்களுக்கு பயந்தது. இப்போது திமுக ஆட்சியில் பயமில்லாமல் இலங்கை அரசு செயல்படுவதால்  தான் தொடர்ந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. 

தேர்தல் வருவதால் மட்டும் பசப்பு வார்த்தைகளை பேசி, நீலீக்கண்ணீரை திமுக வடிக்கிறது. மக்களை பாதிக்கின்ற எந்த சட்டத்தையும் அதிமுக ஏற்காது. சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் குரல் கொடுக்கும் இயக்கம் அதிமுக தான். பிரதமர் பாஜகவின் தலைவர்களில் ஒருவர், இது தேர்தல் காலம் என்பதால் இந்த நேரத்தில் அவரை எப்படி சந்திக்க முடியும்? பல்லு படாமல் என பேசும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நிச்சயம் லேகியம் விற்பவராகதான் இருப்பார் என்று சாடினார்.

Share this story