தமிழ்நாட்டை நெருங்க முடியாது: அமைச்சர் உதயநிதி..

By 
momo2

இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மாகாணப் பள்ளிக்கூடங்களில் இந்தி மொழி கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என 1937ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி ஆணையிட்டது. இதற்கு எதிராக தமிழ்நாட்டில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உயிர் நீத்தனர்.

1965ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி முதல் மார்ச் 15 வரையில் ஐம்பது நாள்கள் தொடர்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எழுபது பேர் இறந்ததாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.  இதில் ஆறு பேர் தீக்குளித்து இறந்தனர். இரண்டு பேர் விஷம் அருந்தி உயிர் நீத்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நடைபெற்ற அறவழியிலான இந்தி எதிர்ப்பு போராட்டம் இன்றளவும் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த நூற்றுக்கணக்கானோரின் தீரத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், மாநிலம் முழுவதும் மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் இன்று கடைபிடிக்கப்பட்டது. ஆளும் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது என திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தி ஆதிக்கமெனும் நெருப்பு தமிழ்நாட்டை உரசாமல் இருக்க, தங்களையே தீக்கிரையாக்கிக் கொண்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவாக, தமிழ்நாடெங்கும் இன்றைய தினம் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தி திணிப்பும் - அதற்கெதிரான நம் சீற்றமும், இன்றும் விமான நிலையங்களிலும் - ரயில் நிலையங்களிலும் - அஞ்சல் நிலையங்களிலும் தொடருகின்றன. இன்றைக்கு இந்திக்குத் துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சிக்கின்றனர்.

கடைசி உடன்பிறப்பு இருக்கிற வரைக்கும் - கருப்பு, சிவப்புக் கொடி இந்த மண்ணில் பறக்கிற வரைக்கும் - அண்ணா - கலைஞர் - கழகத்தலைவர் அவர்களின் தொண்டர்கள் உலவுகிற வரைக்கும், இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது. #மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!” என பதிவிட்டுள்ளார்.

Share this story