முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..
![osm](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/1b51f091a28f12242fa5f3863cae2d14.jpg)
அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு எதிரான தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தோ்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றார். ஆனால் அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் தொகுதி முழுவதும் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ்.மணியன் ரூ. 60 கோடி அளவிற்கு பணப்பட்டுவாடா செய்துள்ளதாகவும், இருவேறு சமூக மக்களிடையே விரோதத்தைத் தூண்டியும், பரிசுப் பொருள்களுக்கான டோக்கன்களை விநியோகித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சுமார் 7,000 பேருக்கு பட்டா வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்தும் வெற்றி பெற்றுள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். எனவே தேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியனின் வெற்றி பெற்றதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.