நயினார் நாகேந்திரனை சுற்றி வளைக்கும் சிபிசிஐடி.. 4 கோடி ரூபாய் யாருடையது.? நேரில் ஆஜராக சம்மன்..
![nynar2](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/605470c19de15dd9ac617cad7da1946a.jpg)
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. தமிழகத்தில் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியிருந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து பணத்தை கொண்டு சென்ற நபர்களை பிடித்து பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அப்போது இந்த பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடைய பணம் என தகவல் வெளியானது.
இதனையடுத்து நயினார் நாகேந்நிரனை விசாரணைக்கு ஆஜராகும் படி இரண்டு முறை தாம்பரம் போலீசார் சம்மன் அளித்தனர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து விலக்கு கேட்டிருந்தார். இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பாஜக நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் நவீன், பெருமாள், சதீஷ் ஆகிய மூன்று பேரும் நேற்று முன்தினம் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி அவர்களிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் உள்ளிட்ட இரண்டு பேருக்கு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். இன்று காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகும் படி அனுப்பிய சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.