பிரதமரின் வருகையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு..

By 
selvap

கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து நாளை கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். சிஏஏவுக்கு எதிராகவும் தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை வழங்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியினால் பொருளாதார பேரழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தமிழகத்திற்கு ஐந்தாவது முறையாக வர இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 37,000 கோடியில் ஒரு சல்லிக் காசு கூட தராத நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடியை கண்டித்து கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் அருகே நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரும்போது எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில்,

சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் அவர்கள் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் டாக்டர் வி.எம். பினுலால் சிங், திரு. கே.டி. உதயம், திரு. ஜெ. நவீன்குமார் ஆகியோர் முன்னிலையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

 

 

Share this story