தேவர் தங்கக்கவசம், நினைவாலய நிர்வாகியிடம் ஒப்படைப்பு..

By 
gold2

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது குரு பூஜையை முன்னிட்டு வங்கியில் இருந்த தேவர் தங்கக்கவசத்தை திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட  அதிமுக நிர்வாகிகள்  வங்கியில் இருந்து பெற்று நினைவாலய  நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவாலயத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் தங்கக் கவசம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், குருபூஜையின்போது தேவர் சிலைக்கு இந்த தங்கக் கவசம் அணிவிக்கப்படும். மற்ற நாட்களில் அதிமுக சார்பில் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி கிளையில் பாதுகாக்கப்படும்.

கடந்த ஆண்டு அதிமுகவில் கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே பிரச்சினை ஏற்பட்டதால் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து ஒப்படைக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்ற குழப்பம் ஏற்பட்டது. அதனால், கடந்த ஆண்டு விழாவின்போது ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது தலைமையிலான அணியே அதிமுக என்று தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. தேவர் சிலையில் அணிவிப்பதற்காக வங்கியில் உள்ள தங்கக் கவசம் அதிமுக பொருளாளராக தற்போது உள்ள திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்காக அதிமுக சார்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில்  தீர்ப்பளித்த மதுரை உயர் நீதிமன்றக்கிளை தங்க கவசத்தை வங்கி நிர்வாகம் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவாலயம் பொறுப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் அடிப்படையில்  மதுரை அண்ணா நகர் வங்கியில் வங்கி மேலாளர் முன்னிலையில் கையெழுத்திட்டு தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக் கொண்டார்.

தேவர் குருபூஜை விழாவுக்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாவிடம் அதனை அவர் ஒப்படைத்தார். 

Share this story