அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டாரா எஸ்.பி.வேலுமணி.? அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது ஏன்?

By 
spv6

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்பட்ட கோவையில் அண்ணாமலை 4அரை லட்சம் வாக்குகளை வாங்கியுள்ளார். 6 சட்டமன்ற தொகுதி உள்ள கோவையில் 3 தொகுதியில் அதிமுக டெபாசிட் வாங்க முடியாத அளவிற்கு குறைவான வாக்குகளை பெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு  அதிர்ச்சியான முடிவுகளும் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜகவை வீழ்த்தி திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களை கைப்பற்றியுள்ளது. பல இடங்களில் தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜகவை டெபாசிட் இழக்க செய்துள்ளது.

கோவை தொகுதி அதிமுகவின் கோட்டையாகவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கோவையில் அதிமுகவின் வாக்குகள் சர சர சரவென குறைந்துள்ளது. கோவையில் உள்ள 6 தொகுதியில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக டெபாசிட் கூட வாங்க முடியாத அளவிற்கு குறைவான வாக்குகளை பெற்றுள்ளது.

பல்லடம் தொகுதியில் திமுக 42.5% வாக்குகளை பெற்றுள்ளது பாஜக 28.4 சதவீத வாக்குகளும் அதிமுக 19.1சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. சூலூர் தொகுதியில் திமுக 39.  2சதவிகித வாக்குகளை பெற்றது. பாஜக 30.8 சதவீத வாக்குகளை பெற்றது.  அதிமுக 21.6 சதவீத வாக்குகளை வாங்கி இருந்தது. அடுத்ததாக கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக 41.2% வாக்குகளும், பாஜக 33.4 சதவிகித வாக்குகளும், அதிமுக 16.6 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

இதற்கு அடுத்ததாக கோவை வடக்கு தொகுதியில் திமுக 40. 6 சதவிகித வாக்குகளும், பாஜக 35.8% வாக்குகளும், அதிமுக 14.5% வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டிற்கு  குறைவான வாக்குகளை இந்த தொகுதியில் பெற்றுள்ளது. இதே போல கோவை தெற்கு தொகுதியில் திமுக 42.7% வாக்குகளும், பாஜக 36.9% வாக்குகளும், அதிமுக 13.3% வாக்குகள் மட்டுமே பெற்று இந்த தொகுதிகளும் டெபாசிட் வாங்குவதற்கான வாக்குகளை இழந்துள்ளது.

சிங்காநல்லூர் தொகுதியில் திமுக 42.3 வாக்குகளும் பாஜக 33.8% வாக்குகளும் அதிமுக 15, 8 சதவீத வாக்குகளும் பெற்று டெபாசிட்டிற்கு தேவையான வாக்குகளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்பட்ட கோவையில் வாக்குகள் குறைந்ததற்கு அதிமுகவினர் சரிவர பணியாற்றவில்லையென கூறப்படுகிறது. குறிப்பாக தேர்தல் நேரத்தில் பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடி முன்பு அதிமுக பணிமனையில் ஆட்களே இல்லாத நிலை நீடித்தது

பாஜகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என எஸ்.பி.வேலுமணி விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இதனை மீறி எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியை முறித்தார். இதனால் எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் இருப்பதாகவும் எந்த நேரமும் பாஜகவிற்கு சென்று விடுவார் என பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மற்ற தொகுதிகளை விட கோவையில் அண்ணாமலைக்கு எதிராக குறைவான வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. 

இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி அக்கறை காட்டவில்லையென கூறப்படுகிறது. மேலும் தொகுதிகளுக்கு சரிவர பணம் செலவு செய்யப்படவில்லையெனவும் அதிமுக தொண்டர்களால் புகார் வாசிக்கப்பட்டு வருகிறது. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு தயார் ஆகும் வகையில் அதிமுகவை மறு சீரமைக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. 

Share this story