மோடியின் 'புதிய இந்தியா'வில் டிஜிட்டல் வழிப்பறி: முதல்வர் ஸ்டாலின் சாடல்..

By 
pmmks

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லாமல் இருக்கும் கணக்குகளிடம் இருந்து அபராதத் தொகையாக ரூ.21,000 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் நாளிதழ்களின் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை மேற்கோள் காட்டி, மோடியின் 'புதிய இந்தியா'வில் டிஜிட்டல் வழிப்பறி முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மோடியின் 'புதிய இந்தியா'வில் டிஜிட்டல் வழிப்பறி! ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?

சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள். சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?

இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?” என பதிவிட்டுள்ளார்.

Share this story