திமுக இன்னும் அந்த பிஞ்சு போன செருப்பை தூக்கி போடவில்லை: அண்ணாமலை பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்..

By 
amalaiji

ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேணுகோபாலை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,

பிரதமர் மோடி 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக போவது உறுதி.பாஜக ஆட்சிக்கு வந்த போது நாட்டின் பொருளாதாரம் 11-வது இடத்தில் இருந்தது. அது தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் கடந்த மாதம் மொத்தம் ரூ.3.5 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. மாநிலத்டின் மொத்த கடன் ரூ.8.53 லட்சம் கோடி. 

நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். மோடி அரசு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து வலிமையான பாரதத்தை உருவாக்கி உள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது.

தமிழ்நாட்டுக்கு மோடி எதுவும் செய்யவில்லை என்று பிரச்சாரம் செய்கின்றனர். 45 லட்சம் விவசாயிகளுக்கு ஒவ்வொரு விவசாயியின் வங்கி கணக்கிலும் ரூ.30,000 வழங்கப்பட்டுள்ளது. பயனாளியின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு நேரடியாக பணம் செலுத்தப்படுவதால் இவர்களால் கமிஷன் அடிக்க முடியவில்லை. அதனால் தான் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகின்றனர். 

கடந்த முறை திமுக இந்த தொகுதியில் வெற்றி பெற்றதால் ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு மனைவியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 350% உயர்ந்துள்ளது. திமுக வெற்றி பெற்றால் அந்த கட்சியினரின் சொத்து மதிப்பு தான் உயரும். மக்களின் வாழ்வாதாரம் உயராது.” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் “ 1980-ல் பேசிய அதே விஷயத்தை சம்பந்தம் இல்லாமல் இன்றும் பேசுகின்றனர். இந்தி, சமஸ்கிருதம், வடக்கு, தெற்கு என திமுக பேசிக் கொண்டிருக்கிறது. திமுக இன்னும் அந்த பிஞ்சு போன செருப்பை தூக்கி போடவில்லை” என்று தெரிவித்தார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பலர் தங்கள் இன்னுயிரை நீத்த நிலையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பிஞ்சு போன செருப்பு என்று அண்ணாமலை பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பூவுலகின் நண்பர் அமைப்பின் சுந்தர்ராஜன் இதுகுறித்து பேசிய போது “ பிரதமர் மோடி இங்கு வரும் போதெல்லாம் தன்னால் தமிழில் பேச முடியவில்லையே என்று வருத்தப்படுவதாக கூறுகிறார். ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் மொழிக்காக நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பிஞ்ச செருப்பு என்று சொல்கிறார். 

பிரதமர் மோடி இங்கு வரும் போது, வெளிநாடுகளிலும் தமிழை பற்றி உயர்வாக பேசுகிறார். ஆனால் இங்கேயே இருக்கும் அண்ணாமலை கேவலமாக பேசுகிறார். சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு பாஜகவினர் மாறிக் கொள்வார்கள். நாங்கள் சிலவற்றை தூக்கி போட்டதால் தான் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. இந்தியை அன்றைக்கு ஒதுக்கி வைத்ததால் தான் இன்று தமிழ்நாடு உற்பத்தியில் 2-வது பெரிய மாநிலமாக உள்ளது” என்று கூறினார்.

Share this story