பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் நிலை : டிடிவி.தினகரன் கணிப்பு

By 
ttvd

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போதைய தி.மு.க. ஆட்சி மிகவும் மோசமான ஆட்சியாக உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் ஒரு வாக்காளருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் செலவு செய்துள்ளனர். மருங்காபுரி, மதுரை கிழக்கு, ஆர்.கே. நகர் உள்ளிட்டவற்றில் நடந்த இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் தான் ஜெயித்தன.

மற்ற இடங்களில் ஆளும் கட்சி ஜெயித்தது. தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சியில் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றியை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இது மக்கள் கொடுத்த வெற்றி இல்லை.

10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் 5 ஆண்டு காலம் ஜெயலலிதா சிறப்பான ஆட்சி வழங்கினார். அதன்பின் அ.தி.மு.க.வினரின் 4 ஆண்டுகால ஆட்சி மிகவும் மோசமானதாக இருந்தது. எனவே அவர்களை பொது மக்கள் ஒதுக்கி வைத்தனர். நல்லாட்சி தருவார்கள் என்ற நம்பிக்கையில் தி.மு.க.வுக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் அதைவிட இது மோசம் என்ற அளவில்தான் தி.மு.க.வின் ஆட்சி உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வார்த்தை ஜாலம் மட்டுமே செய்கிறார். அனைத்து துறைகளிலும் தி.மு.க. ஊழல் செய்து வருகிறது. இது பாராளுமன்ற தேர்தலுக்கான அச்சாரம் அல்ல. பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும் இவ்வாறு அவர் கூறினார்.

Share this story