அண்ணாமலை பேச்சுக்கு பதில் கூற விரும்பவில்லை : ஈவிகேஎஸ்.இளங்கோவன்
 

By 
evks2

தி.மு.க. கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக இன்று கூட்டணி கட்சித் தலைவர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். என்னை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டிட்டு வெற்றி பெறுவதை அதிகமாக விரும்புகிறேன்.

எனது மகன் பணியை நான் தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நமது முதல்-அமைச்சர் ஈரோட்டுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டத்திற்காக நான் பாடுபடுவேன். இதற்காக அமைச்சர் முத்துசாமி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து செயல்படுவேன்.

இந்த தேர்தலில் நிச்சயமாக நாங்கள் மிக பெரும் வெற்றியை பெறுவோம். ஈரோடு மாநகர் பகுதியில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாடுபடுவேன். இதேப்போல் சாய கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பாடுபடுவேன். தி.மு.க.வினர் தேர்தல் பணிகளை சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே அமைச்சர்கள் முத்துசாமி, நேரு ஆகியோர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் மிக பெரிய வெற்றியை பெறுவோம். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. இரு அணிகளையும் இணைக்க முயற்சி செய்து வருகிறாரே என்ற கேள்விக்கு, அண்ணாமலையை பொறுத்தவரை அவர் என்னை விட பெரிய மனிதர். நான் அவரை விட சின்ன மனிதர். அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை.

மேலும் எதை பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில் 30 ஆயிரம் பேரை புதிதாக இணைத்துள்ளார்கள் என்று புகார் அளித்துள்ளார். அது குறித்து கேட்டதற்கு, அவர் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Share this story