எடப்பாடி பழனிசாமி, துரோகத்தாலேயே அழிவார்: டிடிவி.தினகரன்..

By 
admkammk1

ஆளும் திமுகவும், ஆண்ட எடப்பாடி பழனிசாமியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதனால்தான், இவர்களுக்கு மாற்று சக்தியாக அமமுகவை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்;

ஜெயலலிதா வளர்த்த கட்சியை எடப்பாடி பழனிசாமி கபளீகரம் செய்துவிட்டார். நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கலாம். நீதிமன்றத்துக்கு சாட்சிகள் தான் முக்கியம். ஆனால், மனசாட்சி உள்ளவர்களுக்கும் தெரியும். இன்றைக்கு எம்ஜிஆர், ஜெயலலிதாவும் கட்டி காத்த இயக்கத்தில் வலுக்கட்டாயமாக தன்னை தலைவராக்கி கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல், பழனிசாமிக்கு எல்லாம் நாங்கள் தாத்தா என்பதுபோல் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு உள்ளது.

இவர்களிடம் இரட்டை இலை, பணம் பலம் இருக்கின்ற ஒரே தைரியத்தில் பேசி வருகிறார்கள். இதற்கான தண்டனையை மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் வழங்குவார்கள். ஆளும் திமுகவும், ஆண்ட எடப்பாடி பழனிசாமியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதனால்தான், இவர்களுக்கு மாற்று சக்தியாக அமமுகவை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.

முரண்பாடுகளின் மொத்த உருவம் இந்தியா கூட்டணி. காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவர்கள் எல்லாம் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார்கள். இந்தியா கூட்டணியில் கடைசியாக ஸ்டாலின் மட்டும்தான் இருப்பார் என்று விமர்சித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி முதல்வரானபோது, 21 எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்தித்து அவர்மீது நம்பிக்கையில்லை, வேறு முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டும் எனக் கேட்டார்கள். அப்போது  இபிஎஸ்-க்கு ஆதரவாக இருந்தவர்கள் தற்போது அவரை பரிந்து கொண்டுள்ளார்கள். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் தன்னைப் பாதுகாத்தவரையும் கடித்துவிட்டார். கத்தியை எடுத்தவர்கள் கத்தியால் சாவார்கள் என்பதைப்போல, துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி துரோகத்தாலேயே அழிவார்.  

 

தேசிய கட்சிகளான பாஜக அல்லது காங்கிரஸ் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளது. இது தேர்தல் ரீதியான கூட்டணிதான். கொள்கை ரீதியான கூட்டணி அல்ல. தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இதுவரை முடிவு செய்யவில்லை. ஆனால் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் நான் போட்டியிட வேண்டும் என்று என்று வலியுறுத்துகிறார்கள். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

Share this story