முடியும் வேளையும், விடியும் காலையும் : ஓபிஎஸ் தரப்பு அழைப்பு

By 
marudhu167

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :

கூடுதலா ஒன்னு, கொடுக்கப்புடாதா கன்னு :

"விஷச்சாராய மரணங்களுக்கு நீதி கேட்டு, ஆளுநர் மாளிகைக்கு பேரணி நடத்த இருக்கிற திருவாளர் எடப்பாடி எனும் ஜீவகாருண்யர்,

அப்படியே தன் வாழ்நாளில் முக்கால் பாகத்தை அண்ணா திமுகவுக்காகவே அர்ப்பணித்துப்போன புரட்சித்தலைவி அம்மா வாசம் செய்த கோடநாடு பங்களாவுல, கொலைகள் செய்து கொள்ளை அடிக்க காரணமான இரக்கமற்ற கொடியவர்களை, 

குறிப்பா.. அந்த சம்பவத்தை திட்டமிட்டு நடத்திய அயோக்கியனை விரைந்து கைது செய்ய வேணும்னு, அதே ஆளுநருக்கிட்ட கூடுதலா இன்னொரு மனுவை கொடுத்துட்டு வரப்புடாதா."

முடியும் வேளையும், விடியும் காலையும் : 

"எடப்பாடியின் அபகரிப்பு அரசியலை, மிகத் தீவிரமாக எதிர்த்து நிற்கும் கழக கொள்கைப் பரப்பு செயலாளர் புகழேந்தி மீது எடப்பாடியின் கூலிப்படை  தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறது.

நாளுக்கு நாள் வெகுஜன மக்களாலும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்களாலும் வெறுப்புக்கு ஆளாகி வரும் எடப்பாடியின் அதிகாரப்பித்து, கையில் எடுத்திருக்கும் கடைசி ஆயுதம்தான்.. இது போன்ற அவரது வன்முறைத் தூண்டுதல்களாகும்.  

ஆம்..தொண்டர்களை மோதிக்கொள்ள வைத்து, ரத்தம் குடிக்கப் பார்க்கிறது எடப்பாடி என்னும் ஓநாய்.

தகுதியற்ற ஒருவருக்கு தகுதிக்கு மீறிய வாய்ப்பு கிடைத்தால், அதனை தக்க வைத்துக்கொள்ள எத்தகைய எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு, 

சமகாலச் சாட்சியாக விளங்கும் எடப்பாடியின் ஒவ்வொரு செயலையும், மனசாட்சி கொண்ட தொண்டர்களும் தெய்வத்துக்கு நிகரான மக்கள் சக்தியும் அருவருப்போடே பார்க்கிறது.

இதையெல்லாம் உணருகிற அளவுக்கு, பக்குவமோ பெருந்தன்மையோ இல்லாத ஒரு காட்டுமிராண்டியாக இருக்கும் எடப்பாடியை கேடயமாக வைத்து,

அதிமுகவின் பிளவில் ஆதாயம் தேட தி.மு.க. போடும் கணக்கால் மட்டுமே எடப்பாடியின் சிறைபோகும் காலம் தள்ளிப் போகிறதே தவிர, எடப்பாடியால் எக்காலத்திலும் அதனை தவிர்க்க முடியாது என்பது நிச்சயம்.

'கழகத்தை விட்டு எடப்பாடியே வெளியேறு' என தொண்டர்களால் துரத்தி அடிக்கப்படப் போகும் ஒரு சர்வாதிகாரியின் கடைசி முயற்சிகள் எப்படி இருக்குமோ அதனைத்தான் சிலுவம்பாளையத்து சிரிப்புச் சர்வாதிகாரியின் செயல்களும் மெய்ப்பிக்கின்றன.

'திரி நெருப்பு ஆட்டமும், தீயோரது கொக்கரிப்பும் முடியப் போவதை சொல்லும் முன்னறிவிப்பே' என்பதை கருத்தில் கொண்டு இதனை கடந்துபோவோம்.

ஒப்பில்லா தாய் தந்த, நம் தப்பில்லா தங்கமகன் ஓ.பி.எஸ்  தலைமையில், ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகும் காலம் விரைவில் மலரக் காத்திருக்கிறது.

'தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஒர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே' என்னும் மக்கள் திலகம் நமக்கு போதித்த வழியில்,

ஒன்றிணைந்து சாதிக்கவும், புரட்சித்தலைவி அம்மாவின் லட்சியங்களை சத்தியங்களாக்கவும், எடப்பாடி இல்லாத எதிர்கால அண்ணா தி.மு.க.வை முன்னெடுப்போம்.

இதனை தடுக்க முயற்சிக்கும் 'குத்துக்கோல் புகழ்' எடப்பாடியின் குயுக்திகளை தவிடு பொடியாக்குவோம்.

இதற்கு, கழகமே உலகமென வாழும் அப்பழுக்கற்ற அண்ணா திமுகவின் ஒப்பற்ற உறவுகளை வாரீர் வாரீர்
என நம் தாய் காட்டிய அடையாளம் ஓ.பி.எஸ் அழைக்கிறார்."

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story