கோபதாபங்களை மறந்து... கருத்து வேறுபாடுகளை களைந்து.. ஒன்றுபட வேண்டிய தருணம் இது.! ஜேசிடி பிரபாகர்

By 
jct

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக பல பிளவுகளாக பிரிந்து தேர்தலை சந்தித்தது. இதன் காரணமாக 40 தொகுதிகளையும் அதிமுக இழந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டை தொகையை தக்கவைக்க முடியாத நிலை அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிமுக ஒன்றுபட்டால் மட்டுமஏ வெற்றி பெற முடியும் என குரல் எழுந்துள்ளது. பிரிந்து தேர்தலை சந்தித்தால் தோல்வி தான் பரிசாக கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? 

என்ற பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டி ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே சி டி பிரபாகர் சென்னையில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளார். அவர் ஒட்டியுள்ள போஸ்டரில், ஆயிரம் ஆண்டு காலம் ஆனாலும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என சூளுரைத்த எம்ஜிஆர், 100 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என விரும்பிய ஜெயலலிதா, இருபெரும் தலைவர்களின் லட்சிய முழக்கத்தை நிறைவேற்ற வேண்டிய அனைவரும் பிரிந்து கிடப்பதா?

கோபதாபங்களை மறந்து, கருத்து வேறுபாடுகளை களைந்து இயக்கத்தை காப்பதே லட்சியம்  என ஒன்றுபட வேண்டிய தருணம் இது ஒருங்கிணைப்போம் ஒன்றிணைவோம் என ஜேசிடி பிரபாகர் போஸ்டர் ஒட்டியுள்ளார். 

Share this story