யானை குளிப்பதற்கு பிரமாண்ட குளியல் தொட்டி : அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்

By 
bath1

கோவை பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கல்யாணி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை கடந்த 1996-ம் ஆண்டு பேரூர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

கோவிலுக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது. யானையை பார்க்கவே கோவிலுக்கு வரும் கூட்டமும் உண்டு. கல்யாணி யானைக்கு தற்போது 32 வயதாகிறது.

இந்த நிலையில் கல்யாணி யானை குளிக்கவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதியாக அறநிலையத்துறை சார்பில் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கோவிலுக்கு அருகே உள்ள அங்காளம்மன் கோவில் பின்பகுதியில் 5.5 ஏக்கர் நிலத்தில் யானை குளியல் தொட்டி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

யானை குளியல் தொட்டி 4 அடி உயரத்திற்கு, 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பிடிக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது. இந்த யானை குளியல் தொட்டி பணிகள் முடிந்து இன்று திறப்பு விழா நடந்தது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதன் பின்னர் யானை குளியல் தொட்டியில் இறங்கி நீரில் விளையாடி ஆனந்த குளியல் போட்டது. இதனை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அங்கு இருந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர். கல்யாணி யானை தினமும் 3 மணி நேரம் குளியல் தொட்டியில் குளியல் போட உள்ளது. அதே பகுதியில் யானை நடைபயிற்சி மேற்கொள்ள மணலும், கிணற்று மண்ணால் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இங்கு 10 கிலோ மீட்டர் தூரம் வரை தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள உள்ளது. இதனை தொடர்ந்து பேரூர் தமிழ் கல்லூரியில், பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் உள்ள அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் 84 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு சாந்தலிங்க அடிகளார் சிவ தீட்சை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சிவ தீட்சை வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பலர் கலந்து கொண்டனர். 

Share this story