ஆடும், ஆட்டுக் குட்டியும் : ஓபிஎஸ் தரப்பு விமர்சனம் 
 

By 
marudhu105

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

மராட்டிய மாநிலத்தின் சிவசேனா அரசியலை பா.ஜ.க.வுக்கு பல்லக்கு தூக்கும் ஷிண்டேவை நோக்கி நகர்த்தியது போலவே, 

தமிழ் நாட்டிலும் அண்ணா தி.மு.க. அரசியலை அதே பா.ஜ.க.வுடன் 2024- நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கும் அண்ணாமலை உறவினர் எடப்பாடியை நோக்கி அதே நீதிமன்றம் வழியாக நகர்த்தி இருக்கிறது காவிக் கட்சி. இது, என் போன்றோர் எதிர்பார்த்த ஒன்று தான்.

2017-ல் எப்படி திருமதி.சசிகலாவுக்கு எதிராக நீதிமன்றம் மூலமாக விரும்பிய தீர்ப்பை விரும்பிய வேகத்தில் வரவழைத்து,

அடிமை எடப்பாடி ஆட்சிக்கு அடித்தளம் அமைத்து தரப்பட்டதோ, அதுபோலவே இப்போதும் அதே பா.ஜ.க.வின் அரசியல் ஆதாயச் சூதாட்டம் மீண்டும் அரங்கேறி இருக்கிறது.

ஈரோட்டு கிழக்கு இடைத்தேர்தல் வாக்களிப்புக்கு, சிலமணி நேரங்களே எஞ்சியிருக்கும் நிலையில் பல வாரங்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த தீர்ப்பு இடைத்தேர்தல் வாக்களிப்பில்,மக்களிடம் சலனத்தை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் உச்சநீதி மன்றம் அதனை கருத்தின் கொள்ளாது செயல்பட்டிருக்கிறது.

அது சரி, இது போன்ற வாய்ப்புகள் எதிர்கட்சிகள் எதற்கும் கிட்டாத சந்தர்ப்பம் என்பதை, சாமானிய மக்களாலும் புரிந்துகொள்ள முடியும்.

ஆக..வருமான வரித்துறை, அமலாக்க பிரிவு, சி.பி.ஐ என்னும் வரிசையில் பா.ஜ.க.வின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு நீதித் துறையும் பயன்படுத்தப்படுகிறது என்பது அப்பட்டமாகவே தெரிகிறது.

பதினோரு எம்.எல்.ஏக்களை மட்டுமே தன் வசம் வைத்திருந்த அன்றைய பா.ஜ.க. ஆதரவு பன்னீர் செல்வத்துக்கு, இரட்டை இலை சின்னத்துக்கான உரிமை தொடங்கி,பல சாதகங்கள் அன்று கிடைத்தன என்றால்..

இப்போது, அந்த அரவணைப்பு எடப்பாடியை நோக்கி நகர்ந்து விட்ட நிலையில்.. எடப்பாடி கைகளில் வேண்டியதை தருகிற அலாவுதீனின் அற்புத விளக்கு இருப்பதற்கு சமம் தானே.

ஆனாலும், ஆட்டுக்கு தீனி போட்டு வளர்க்கும் பாசம் எல்லாம், தேர்தல் திருவிழா வரைக்கும்தான் என்பது, ஆட்டுக்கும் அதனை ஏற்பாடு செய்திருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் பொருந்தும் தானே.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 
 

Share this story