விடுதலை சிறுத்தை, முஸ்லிம் லீக் கட்சிக்கு எத்தனை தொகுதி.? இன்று திமுகவோடு உடன்பாடு? 

By 
vvk

நாடாளுமன்ற தேர்தல் தேதி எப்போது வேண்டும் என்றாலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக தனது கூட்டணி கட்சியோடு தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று மாலை விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில், கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 3வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக களப்பணியை ஏற்கனவே தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் வியூகத்தை ஏற்கனவே செயல்படுத்த தொடங்கியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் குறைந்தபட்சம் 25 தொகுதியை இலக்காக வைத்து பாஜக செயல்படுகிறது. இந்தநிலையில் பாஜக தேசிய தலைமைக்கு ஷாக் கொடுக்கும் வகையில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. 

இதனால் புதிய கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக பாஜக தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து பாமக மற்றும் தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக தரப்பும், பாஜகவும் ரகசியமாக பேசிவருகிறது. அதே நேரத்தில் திமுக கூட்டணியானது தனது முதல் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில்,

இன்று விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு 7முதல் 9 இடங்களை கொடுக்க முடிவு செய்துள்ளது. இதே போல கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதியும், விடுதலை சிறுத்தைக்கு 2 தொகுதியும்,  மதிமுகவிற்கு 1அல்லது 2 தொகுதியும் கொடுக்கப்படவுள்ளது. 

கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த பாரிவேந்தர் வெளியேறிவிட்டதால் அவருக்கு பதிலாக தற்போது கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இடம்பெறவுள்ளது. எனவே இந்த கட்சிக்கு இரண்டு இடங்களை ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  தொகுதி பங்கீடு தொடர்பாக இரண்டாம் அல்லது 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு  இறுதி செய்யப்படும் எனவும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 


 

Share this story