சட்டத்துக்கு புறம்பான தேர்தல் : ஓ.பன்னீர்செல்வம் கடிதம் 

By 
opseps8

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக 37 பேர் விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

எடப்பாடியை எதிர்த்து வேறு யாரும் இதுவரை மனுதாக்கல் செய்யவில்லை. எனவே, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதுவுமே முறைப்படி இல்லாமல், பிக்பாக்கெட் அடித்து செல்வது போல பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதாக குற்றம்சாட்டி உள்ளார். தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு சார்பாக மனோஜ்பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்டத்துக்கு புறம்பாக நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளரான என்னிடம் ஆலோசிக்காமல் தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக தேர்தல் நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஜூலையில் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கிறது. எனவே, இந்த தேர்தலை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share this story