தமிழகத்தில், எந்த வைரசும் இனி பரவாது : சுகாதாரத்துறை திட்டவட்டம்
நிபா மற்றும் ஜிகா வைரஸ் பரவலை தமிழகத்தில் பரவாத வண்ணம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நான்காம் கட்ட கொரோனா தடுப்பு ஊசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை தமிழக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து மருத்துவ முகாம்களை அமைத்து வருகிறோம்.
அதன்மூலம் தொற்றை கட்டுப்படுத்தி வருகிறோம்.
நடவடிக்கை :
அண்டை மாநிலமான கேரளாவில், நோய்த் தொற்று குறையாத காரணத்தால், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி சான்றிதழ் அல்லது நோய் தொற்று பரிசோதனை சான்றிதழை கட்டாயப்படுத்தியுள்ளோம்.
அவை இருந்தால், மட்டுமே அவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், கேரளாவில் தற்போது உள்ள நிபா மற்றும் ஜிகா வைரஸ் பரவலை தமிழகத்தில் பரவாத வண்ணம் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சி பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் கொசு ஒழிப்பு முறையை தொடர்ந்து நடத்தி வருகிறோம். டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்
தடுப்பூசி :
முன்னதாக, தேனி மாவட்டம், கம்பத்தில் நான்காவது தடுப்பூசி முகாமை மாநில மக்கள் நல்வாழ்வுத் தறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். முகாமில் அவர் பேசும்போது, தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் விழிப்புணர்வு
அதிகமாகி வருகிறது,
மாநில அளவில் முதல் முகாமில் 28 லட்சம் பேர், இரண்டாவது முகாமில் 16 லட்சம் பேர்களும், மூன்றாவது முகாமில் இருபத்தி ஆறு லட்சம் பேர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
தேனி மாவட்டத்தை பொறுத்த அளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10,44558 பேர்களில் முதல் தவணை தடுப்பூசி யை, 5,72,302 பேர் செலுத்தி கொண்டுள்ளனர், இரண்டாவது தடுப்பூசியை 2,05 549 பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். மாநில அளவில் இது குறைவு என்றாலும் அடுத்த முறை அதிக அளவில் செலுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி கூறியுள்ளார்.
தேவைப்படும் பட்சத்தில் போதுமான அளவு தடுப்பூசிகள் தேனி மாவட்டத்திற்கு வழங்கப்படும்' என்றார்.