அது மதப்புயல் அல்ல, மடப்புயல்: நடிகர் சத்யராஜ் பரபரப்பு பேச்சு..
![sathyaraj](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/ac715e3814f3981cf2da670c24a44b10.jpg)
திமுக சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பு பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,
“ வட மாநிலத்தில் இருந்து மதப்புயல் ஒன்று தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதை உள்ளே விட்ராதீங்க என்று கூறுகிறார்கள். அதை நாம் விடமாட்டோம். அது வடமாநிலத்தை பொறுத்து தான் மதப்புயல்.. தமிழ்நாட்டில் அது மடப்புயல் தான். ஏனெனில் இங்கு எல்லா மதங்களை சேர்ந்தவரும் அண்னன் தம்பி போல் பழகிக்கொண்டிருக்கிறோம்.. இங்கு வந்து மதத்தை வைத்து அரசியல் செய்யவே முடியாது.
அதனால் தான் அது மதப்புயல் அல்ல, மடப்புயல் என்று சொல்கிறேன். இங்கு எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் அவ்வளவு ஒற்றுமையாக நண்பர்களாக இருக்கிறோம். இங்கு எப்படி மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியும்.
நம்மை படிக்கவிட கூடாது என்று பல தடைகளை உருவாக்கினர். ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறோம். இன்று தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் பெரிய அளவில் வந்து விட்டனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை.
சமீபத்தில் நான் ஒரு படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தேன். அங்கு ஒரு பீஃப் ஸ்டால் கூட இல்லை. நாம் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய அவர்கள் யார். இது மிகவும் ஆபத்தானது. இதற்காக தான் மதப்புயல் என்ற மடப்புயல் உள்ளே வரக்கூடாது என்று சொல்கிறோம். இங்கு இந்து இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், மத நம்பிக்கை கொண்டவர், மத நம்பிக்கை இல்லாதவர் என அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த ஒற்றுமை சீர்குலைந்து போகக்கூடாது என்பதே தமிழர்களின் கொள்கை.
தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஸ்டாலின் வரை அனைவரும் பெரியார் வழி வந்தவர்கள் தான். நமக்குள் இருப்பது பங்காளி சண்டை தான். அதில் பகையாளி யாரும் உள்ளே வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.