ஜோ பைடன் சொன்ன ஜோக்..பிரதமர் மோடி ரசித்து சிரித்தார்..
வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை வரவேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியாவுடனான தனது பழைய நிகழ்வு ஒன்றை நினைவு கூர்ந்தார். அவர் கூறும்போது, ‘1972-ம் ஆண்டு நான் 28 வயதில் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அப்போது, பதவி ஏற்பதற்கு முன்பாக எனக்கு மும்பையில் இருந்து பைடன் என்ற பெயரில் ஒருவர் வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், அதை நான் அப்படியே விட்டு விட்டேன்.
மறுநாள் நிருபர்கள் கூட்டத்தில் என்னிடம், 'இந்தியாவில் 5 பைடன்கள் வசித்து வருவதாக தெரிவித்தனர்' உடனே பிரதமர் மோடி பலமாக சிரித்தார்.
மேலும், தனது பேச்சை தொடர்ந்த ஜோ பைடன் ஏற்கனவே கிழக்கிந்திய தேயிலை கம்பெனியில் ஜார்ஜ் பைடன் என்ற பெயரில் கேப்டன் ஒருவர் இருந்திருக்கிறார். அவர் அங்கேயே தங்கி இந்திய பெண்ணை மணந்தார்.
என்னால் அதை கண்காணிக்க முடியவில்லை. எனது இந்திய தொடர்பு குறித்து, இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த சந்திப்பின் நோக்கம் அனைத்தும், எனது இந்திய தொடர்பை கண்டுபிடிக்க உதவுவதாக இருக்கும் என்று கூறிவிட்டு மோடியை பார்த்தார்.
உடனே மோடி, ஜோ பைடனின் ஜோக்கை ரசித்து சிரித்தார்.
பின்னர் மோடி கூறும் போது, ‘நீங்கள் பைடன் குடும்ப பெயர்களை பற்றி்ப் பேசினீர்கள். இதை நீங்கள் என்னிடம் முன்பே குறிப்பிட்டு இருந்தீர்கள்.
இது தொடர்பான ஆவணங்களை கண்டு பிடிக்க முயன்றேன். நான் சில ஆவணங்களுடன் வந்து இருக்கிறேன். ஒருவேளை, அந்த ஆவணங்கள் ஏதாவது பயன் தரலாம்’ என்றார்.
அதற்கு ஜோ பைடன் கூறும்போது, நான் நிம்மதியாக இருக்கிறேன் என்றார்.
இதனால், வெள்ளை மாளிகையில் இருந்த அனைவரும் பலமாக சிரித்தபடி இருந்தனர்.