கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. இபிஎஸ்-க்கு நெருக்கடி? நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..

By 
eps77

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ம் ஆண்டு தற்போது அதிமுக பொது செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது.  தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்ததோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சாமுவேல் மேத்யூ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறக்கூடிய காரணங்கள் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதோடு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எடப்பாடி பழனிசாமிக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று இபிஎஸ் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும்  இன்று விசாரணைக்கு வந்த போது  எடப்பாடி பழனிசாமியிடம் அறிவுறுத்தி உள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் தெரிவித்தனர். பொங்கல் விடுமுறை மற்றும் சட்டப்பேரவை நடைபெற உள்ளதால் அதன்பின்னர் ஆஜராக இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.  பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் ஜனவரி 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க  வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Share this story