நாடாளுமன்ற தேர்தல்: சீமானின் மனைவி கயல்விழிக்கு முக்கிய பதவி..

By 
kayal

நாம் தமிழர் கட்சி தேர்தல் சட்ட ஆலோசகராக சீமானின் மனைவி கயல்விழி நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வருகிறார். இவரது மனைவி கயல்விழி. தமிழ் தேசியத்தை வலியுறுத்தி அரசியல் நடத்தும் சீமான், திமுகவின் குடும்ப அரசியலை அவ்வப்போது கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், அவரது மனைவி கயல்விழியை நாம் தமிழர் கட்சியின் பொறுப்பிற்கு கொண்டு வர சீமான் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக அக்கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த தடா சந்திரசேகரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானதைத் தொடர்ந்து அந்த பதவியை கயல்விழிக்கு வழங்க போவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் கயல்விழிக்கு முக்கிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. தென்சென்னை மக்களவைத் தொகுதியின் இரண்டு சட்ட ஆலோசகர்களில் ஒருவராக கயல்விழி காளிமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார். 

குடும்ப அரசியலை கடுமையாக விமர்சனம் செய்து வரும் சீமான் மனைவி, மைத்துனர் ஆகியோருக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கியத்துவம் கொடுத்து வருவது குடும்ப அரசியல் இல்லையா என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. 

Share this story