இந்தியாவே திரும்பிப் பார்க்க, ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் : அதிமுக முன்னாள் அமைச்சர்
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தோப்பு வெங்கடாசலம் விருப்ப மனு கொடுத்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இதையடுத்து, தோப்பு வெங்கடாசலம் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் :
தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் தோல்வியடைந்தார். பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயகுமார் வெற்றிபெற்றார்.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று அதிமுக நிர்வாகிகள் உள்பட 900 பேருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
சிறப்பான ஆட்சி :
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறியதாவது :
அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அற்புதமாக வழிநடத்தி வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கைகள் எங்களை ஈர்த்தது.
இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில், சிறப்பாக ஆட்சி செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்டு முதலமைச்சர் செயல்படுகிறார்' என்றார்.
*