எம்.பி. பதவி பறிப்புக்கு, மம்தா பானர்ஜி கடும் கண்டனம்..

By 
mahuva

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் அரசுக்கு எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டார்ஜிலிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மொய்த்ராவின் பதவி பறிப்பு, ஜனநாயகப் படுகொலை என்றும் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது என்றும் சாடியுள்ளார்.

"இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு அவமானம். மஹுவா மொய்த்ரா வெளியேற்றப்பட்டதை கண்டிக்கிறோம்; கட்சி அவருடன் உறுதியாக நிற்கிறது. தேர்தலில் எங்களை தோற்கடிக்க முடியாமல் பாஜக பழிவாங்கும் அரசியலில் இறங்கியுள்ளது. இன்றைய தினம் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு துரோகம் இழைக்கப்பட்ட சோகமான நாள்" எனவும் விமர்சித்துள்ளார்.

மஹுவா மொய்த்ராவை அவையில் பேச அனுமதிக்காத மக்களவை சபாநாயகரின் முடிவையும் மம்தா விமர்சித்துள்ளார். "மஹுவா மொய்த்ரா தனது வாதங்களை முன்வைக்க வாய்ப்பளிக்காமல் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட விதத்தையும் நான் கண்டிக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், பிற எதிர்க்கட்சிகளும் மொய்த்ராவின் பதவி பறிப்பு ஜனநாயக விரோதமானது என்று கண்டித்துள்ளன. ஆனால், பாஜக மஹுவா மொய்த்ரா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதால், பதவி பறிப்பு நடவடிக்கை சரியான முடிவுதான் என்று கூறுகிறது.

பிஜேபி எம்பி நிஷிகாந்த் துபே மஹுவா மொய்த்ரா குறித்துக் கூறிய குற்றச்சாட்டுகளின் விளைவாகவே அவர் மீது இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டிருக்கிறது. மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் இருந்து பணம் மற்றும் பரிசுகள் பெற்று நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டதாக நிஷிகாந்த் துபே கூறியதன் பேரில், நாடாளுமன்றத்தின் நெறிமுறைக் குழு விசாரணை நடத்தியது.

Share this story