எந்த மாநிலத்திலும் மோடிக்கு செல்வாக்கு இல்லை: ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு..

By 
rsbharathi

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர் 534 படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை கடற்படையின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்து வருகின்றனர்.

மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 9 கடிதங்களும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார்.  இருந்த போதும் தமிழக மீனவர்களை பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு கண்டித்து திமுக சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து இன்று ராமேஸ்வரத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், மீனவர்கள் கைது தொடர்பாக பாராளுமன்ற விவகாரத்தில் திமுக கவன ஈர்ப்பு கொண்டுவந்தது. ஆனால் இதனை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

ஆனால் இதற்கு பதிலாக ராமர் கோயிலுக்கு நன்றி தெரிவித்து தீர்மானத்தின் மீது விவாதம் நடத்துகிறார்கள். 2014 ஆண்டு பிரச்சாரத்தின் போது பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கள் கூட கைது செய்யப்படமாட்டார்கள் என மோடி இந்த பகுதியில் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் தற்போது 10 ஆண்டுகளில் 3076 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மோடி அரசு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.

உத்தரபிரதேசத்தில், குஜராத்தில் பிரச்சனை என்றால் கண்ணீர் வடிக்கும் மோடி,  தமிழக மீனவர்களை பற்றி கவலையில்லை. திமுக அரசு இந்துக்களுக்கு விரோதி என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கோயில் அதிகமாக உள்ள ராமநாதபுரம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திருச்செந்தூர் தொகுதியிலும் திமுக வெற்றி.

இலங்கை  பொருளாதார மோசமடைந்துள்ளது. கோயில் வாசலில் பிச்சை எடுப்பது போல் இலங்கை அதிபர் பிச்சை எடுக்கிறார். இதற்கு பிரதமர் மோடி 34ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கிறார். நம் மீனவர்களை கொல்லும் இலங்கைக்கு மோடி உதவி செய்கிறார். ஆனால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நமக்கு எந்த உதவியும் செய்யவில்லை. 

தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெல்லும் என கருத்து கணிப்பு வந்துள்ளது. எனவே மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது. எந்த மாநிலத்திலும் மோடிக்கு செல்வாக்கு இல்லை.  வட மாநிலங்களிலும் இல்லை, தென் மாநிலங்களிலும் இல்லை.  காஷ்மீர் கன்னியாகுமரி முதல் எதிர்ப்பு அலை வீசுகிறது.

நமது வரிப்பணமான 34 ஆயிரம் கோடியை இலங்கைக்கு கொடுத்து விட்டு தனது நண்பர் அதானிக்கு கான்டிராக்ட் வாங்கி கொடுத்துள்ளார் மோடி. 2024ஆம் ஆண்டு மே மாதம் மத்தியில் புதிய ஆட்சி வந்தவுடன் ஜூன் மாதம் முதல் தமிழக மீனவர்களுக்கு முழு பாதுகாப்பாக அரசு இருக்கும் என ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். 

Share this story