ம.பி-உ.பி. மாநிலங்கள் போல், தமிழகத்திலும் ஊரடங்கு அமல்? : முதலமைச்சர் ஆலோசனை
உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. தற்போது, ஒமைக்ரான் தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
ஆலோசனைக் கூட்டம் :
ஒமைக்ரான் பரவல் மேலும் அதிகரிக்காத வகையில், அதை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு திட்டங்களை தீட்ட முன்வந்துள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்று காலை 12 மணியளவில் இந்த கூட்டம் தொடங்கி உள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் மற்றும் உயர் அதிகாரிகள், மருத்துவ வல்லுனர் குழுவுடன் ஆலோசனை இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஊரடங்கு :
ஒமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, புதிய நடவடிக்கைகள் என்னென்ன மேற்கொள்ளலாம்? புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? இரவு நேர ஊரடங்கு தேவையா?
6 - 12 -ம் வகுப்பு வரை சுழற்சி முறைக்குப் பதில், நேரடி முறையில் வகுப்புகள் என்ற முடிவை அமல்படுத்தலாமா? வேண்டாமா? என்பதைக் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போல், தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு விதிக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அறிவிப்பு :
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஒமைக்ரான் பரவாமல் தடுப்பதற்கு அறிவிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் ஆகியவை பற்றி, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், புதிய முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
*