தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு? : அமைச்சர் தகவல்..
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் புதிய தரவு அலகு மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சார்பில் சிறப்பு 'டேட்டா செல்' என்ற செயலியும் தொடங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், 'புதிய தரவு மையத்தின் மூலம், தமிழ்நாட்டு சித்த மருத்துவர்கள், இந்திய மருத்துவத் துறையுடன் தொடர்புகொள்ள முடியும்.
சித்த மருத்துவ பல்கலைக் கழகத்துக்கான அலுவலகத்தை 10 நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். தமிழ்நாட்டில் அமையவுள்ள சித்த மருத்துவ பல்கலைக் கழகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
விரைவில், மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் இந்த பணிகள் முடிக்கப்படும். இந்தியாவுக்கு முன்மாதிரியான பல்கலைக்கழகமாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் இருக்கும்.
மே மாதத்திற்குப் பிறகு, 77 இடங்களில் சித்த மருத்துவ கொரோனா மையங்கள் அமைக்கப்பட்டன. முதல் மற்றும் 2வது கொரோனா அலையின்போது, இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது, தமிழ்நாடு முழுவதும் 97 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஒமைக்ரான் மரபணு பகுப்பாய்வு முடிவுகள் மத்திய அரசிடம் இருந்து வருவது தாமதமாகிறது.
வரும் டிசம்பர் 31-ம் தேதி இரவு நேர ஊரடங்கு விதிப்பது தொடர்பாக, முதலமைச்சர் தலைமையில் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளோம்.
அந்த ஆலோசனைக்கு பின்னர், முதலமைச்சர் இதுதொடர்பாக முடிவெடுப்பார்' என்றார்.
*