என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவு..

By 
sorder

ஆங்கில புத்தாண்டு வாழ்த்து பெறுவதற்காக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வருவதை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தவிர்க்குமாறு திமுக தலைமைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு அன்றும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை கட்சி தொண்டர்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம். இந்நிலையில், கடந்த டிசம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தது.

அதேபோல்,  டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்த மழையால் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. 

தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு அன்று தன்னை சந்தித்து வாழ்த்து பெற வருவதை தவிர்க்குமாறு கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருவதை, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கட்டாயம் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story