2-வது நாளாக, பத்ம விருதுகள் : பிரதமர் முன்னிலையில், ஜனாதிபதி வழங்கினார்
பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் குடிமக்களுக்கு, நாட்டின் உயரிய விருதுகளான பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ போன்ற விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன.
இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படவில்லை.
எனவே, கடந்த ஆண்டு (2020) மற்றும் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஜனாதிபதி மாளிகையில் நேற்றும், இன்றும் என 2 நாட்களாக வழங்கப்படுகின்றன. இதில், முதற்கட்டமாக 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 141 பேருக்கு நேற்று வழங்கப்பட்டன.
இதில், 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அடங்கும்.
இந்நிலையில், டெல்லியில் இன்று 2-வது நாளாக பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். சாலமன் பாப்பையா, தமிழக வீராங்கனை அனிதா உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கினார்.
மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. விருதை அவரது மகன் சிராக் பாஸ்வான் பெற்றுக் கொண்டார்.
மூத்த சிற்பி சுதர்சன் சாஹூக்கு பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
அசாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகோய்க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை அவரது மனைவி டோலி கோகோய் பெற்று கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
*