1-ந்தேதி பள்ளி-கல்லூரிகள் திறப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழகத்தில், நாளை மறுதினம் (செப்டம்பர் 1-ந்தேதி) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதால், என்னென்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும்,
தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய் பேரிடர் துறை உயர் அதிகாரிகள், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தற்போதைய கொரோனா பரவல் நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
வழிகாட்டு நெறிமுறைகள் :
கேரளாவில், கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால், இந்த சூழலில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதால் மாணவ-மாணவிகளுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் ஒழுங்காக கடைப்பிடிக் கப்படுமா? என்பது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
மருத்துவ வசதி :
கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றியும் அவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க என்னென்ன வசதிகள் செய்யப்படும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் அதன் அருகில் உள்ள ஆஸ்பத்திரி டாக்டர்களின் தொலைபேசி எண்கள் கட்டாயம் எழுதி வைத்திருக்க வேண்டும் என்று ஆலோசனையில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மாநகராட்சி, நகராட்சி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளின் தொலைபேசி எண்களும் பள்ளி, கல்லூரிகளில் வைத்திருக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
இறுதியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.