பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி : இரு அவைகளும் ஒத்திவைப்பு
 

By 
parliament2

இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜன.31 ஆம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற வேண்டும்.

இந்த நிலையில், அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால் கடந்த இரண்டு அலுவல் நாட்களாக நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று (திங்கள் கிழமை) நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடியது.

எல்ஐசி நிறுனம் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தது மற்றும் அரசு வங்கிகள் அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ள கடன்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இன்றும் நாடாளுன்றத்தில் அமளியில் ஈடுபட்டன.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதிகாக்க வலியுறுத்தினார். ஆனாலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார். இந்தநிலையில் இருஅவைகளும் 2 மணிக்கு மேல் கூடியது.

அப்போது அதானி குழும முறைகேடு விவகாரம்-நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். எதிர்க்கட்சியின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

Share this story