ஓபிஎஸ் அப்பீல் வழக்கு, மீண்டும் ஒத்திவைப்பு..

By 
ops43

அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ் பாபு, "அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலும் செல்லும்" என்று தீர்ப்பு அளித்தார். இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிப்பதற்கு முன்பு தன்னுடைய கருத்தையும் கேட்க வேண்டும் என்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு மட்டும் நீதிபதிகள் எம்.மகாதேவன் முகமது ஷபிக் ஆகியோர் முன்பு இன்று காலையில் முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்று அவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கூறினர். 

இதையடுத்து அனைத்து மேல்முறையீட்டு வழக்குகளையும் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறிய, நீதிபதிகள் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கை நாளைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Share this story