இம்ரான்கான் ஆதரவாளர்களை கைது செய்ய, பாகிஸ்தான் பிரதமர் அதிரடி உத்தரவு

By 
serif

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராகுவதற்காக கடந்த 9-ந்தேதி இஸ்லாமாபாத் கோர்ட்டுக்கு வந்தபோது அவரை துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்து சென்றனர். ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதாக அரசு தெரிவித்தது.

இதையடுத்து இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெரும் வன்முறை ஏற்பட்டது. ராணுவ வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் நாடு முழுவதும் பதற்றம் நிலவியது. போராட்டக்காரர்களுக்கு ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்தது.

கைதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இம்ரான்கான் தரப்பில் முறையிடப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இம்ரான்கான் கைது சட்டவிரோதம் என்றும், அவரை இஸ்லாமாபாத் கோர்ட்டில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. இதன்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இம்ரான்கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். வன்முறையில் 74 போலீஸ் வாகனங்கள் தீ வைக்கப்பட்டன.

போலீஸ் நிலையங்கள் உள்பட 22 அரசு கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன. 152 போலீசார் காயம் அடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். வன்முறை தொடர்பாக 2800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வன்முறை செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளம் கண்டு கைது செய்ய அதிகாரிகளுக்கு 72 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவி, உளவுத்துறை உள்ளிட்ட அனைத்து சாத்திய கூறுகள் மூலம் இந்த நடவடிக்கைகள் பயன்படுத்தப்படும். இவர்களை நீதியின் முன் கொண்டு வருவது அரசாங்கத்திற்கு ஒரு சோதனையாக இருக்கும்.

இந்த வழக்குகள் பயங்காரவாத எதிர்ப்பு நீதிமன்றங்களால் விசாரிக்கப்படும் என்றார். இதையடுத்து அதிகாரிகள் வன்முறையில் ஈடுபட்ட இம்ரான்கான் ஆதரவாளர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். ராணுவ தளபதி குடியிருப்பில் தாக்குதலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களின் படங்களை போலீசார் வெளியிட்டனர்.

 

Share this story