திறமையானவர்களை மக்கள் கண்டுகொள்வதில்லை : கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வருத்தம்

By 
tamilisai4

கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நாம் அனைவரும் யோகா கற்றுக்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். வரும்போது ஒரு பெரியவர் என்னிடம் 2 செல்போன்கள் எப்படி வைத்துள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் 2 மாநிலத்தையே சமாளிக்கிறேன். 2 செல்போனை சமாளிக்க முடியாதா என்றேன். அதேபோல் தான் அனைவரும் பணியாற்ற வேண்டும்.

நான் 48 மணி நேரம் வேண்டுமானாலும் தொடர்ச்சியாக பணியாற்ற தயாராக உள்ளேன். நான் விழுந்து விழுந்து வேலை செய்யும் போது அது செய்தி ஆவதில்லை. ஆனால், நான் விழுந்தால் அது பெரிய செய்தி ஆகிறது. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒவ்வொரு மாநிலங்களிலும் பணியாளர்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும். பணியாளர்கள் தினம் என்பது உன்னதமான தினம். அந்த எண்ணம் தற்போது தான் தோன்றுகிறது. மாநிலங்களில் அதை அமல்படுத்துவதற்கான திட்டம் இருக்கிறது.

கவர்னர்கள், ஜனாதிபதி, உள்துறை அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழக மக்கள் எங்களை போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களையும், எங்கள் போன்ற திறமையானவர்களையும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் மத்திய அரசு எங்களது திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

தமிழக மக்கள் எங்களை அடையாளம் கண்டு இருந்தால் நாங்கள் எம்.பிக்கள் ஆகி பாராளுமன்றம் செல்வோம். மத்திய மந்திரிகள் ஆவோம். ஆனால் தோற்கடிக்கப்பட்டதால், எங்களின் திறமையை அறிந்த மத்திய அரசு, அதனை வீணடிக்க வேண்டாம் என கருதி கவர்னர்களாக ஆக்கி வருகிறது.

எங்களைப் போன்ற திறமை மிக்கவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும் என்பது எனது கோரிக்கையாக வைக்கிறேன். இதை நான் சொன்னாலும் இதுகுறித்தும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வரக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story